“மானூத்து மந்தையில”. . . அப்படின்னு ஒரு பாட்டு கேள்வி பட்டு இருப்பிங்க. அதுல இந்த வரி வரும். கவனிச்சு இருக்கீங்களா?

“நாட்டுக்கோழி அடிச்சி, நாக்கு சொட்ட சமைச்சு,

நல்லெண்ணெய் ஊத்தி கொடு ஆத்தா . .

பச்சை உடம்புக்காரி பார்த்து நடக்க சொல்லுங்க”

அது மாதிரி ஒரு குழந்தையை பெத்து எடுக்குற அளவுக்கு இருந்த மொத்த தெம்பையும் பிரசவத்தில் விட்டதுக்கப்புறம், உடல் நலம் தேருறதுக்காக, நாட்டு கோழி சமைச்சு கொடுக்கிறது தமிழரோட மரபா இருந்துச்சு. அதே மாதிரி தான் ஒரு பொண்ணு பூப்படைஞ்சதும் நாட்டுக் கோழி முட்டையிலயும், வறுவல்லயும் நல்லெண்ணய் ஊத்தி கொடுப்பாங்க. ஆனா இந்த அவசர உலகத்துல அதை பலரும் இப்போ பின்பற்றுறது இல்லை.

என்னதான் வாராவாரம் பிராய்லர் சிக்கன் எடுத்து சமைச்சாலும், மாசத்துல ஒரு முறையாவது நாட்டுக்கோழி சமைச்சீங்கன்னா உடம்புக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பா பிராய்லர் சிக்கன், வேகமா வளர்றதுக்காக போடுற தைராய்டு இன்ஜெக்ஷன் பல பக்க விளைவுகளை மனுஷங்களுக்கு ஏற்படுத்துறது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

முதல் விஷயம் நாட்டுக்கோழி உங்க ஊர்ல கிடைக்கலன்னா, அது எங்க கிடைக்கும் அப்படிங்கறது தேடி வச்சுக்கோங்க. பல இடங்களில் பண்ணையிலேயே வளர்க்கிற நாட்டுக்கோழி கிடைக்கும். அது பேர் கிரிராஜன் கோழி. அதைவிட வீட்டுக்குள்ள வளர்க்கப்படும் நாட்டுக்கோழிக்கு ருசி அதிகம். ஏன்னா, அது பூச்சி புழுக்களை பிடித்து சாப்பிட்டு மிகவும் நோய் எதிர்ப்பு சக்தியோடு வளர்ந்து இருக்கும். அப்படி பண்ணையில் வளர்ந்த கிரிராஜன் கோழிய வாங்கி ஏமாறாமல் கிராமங்கள்லயோ அல்லது வீடுகளிலயோ வளர்க்கப்படுற நாட்டுக்கோழி கிடைச்சதுன்னா கண்டிப்பா வாங்கி சமைச்சு பாருங்க.

அப்படி சிக்குன்னு ஒரு வெடக்கோழி உங்களுக்கு கெடச்சுச்சுன்னா அதை எப்படி செய்யறது? அப்படிங்கற ரெசிபி சொல்லித் தருவது உங்க “த காரிகை”.

தேவையான பொருட்கள்

வேக வைக்க. . .

ஒரு கிலோ நாட்டுக்கோழி

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்

100 கிராம் இஞ்சி

150 கிராம் பூண்டு

அரைக்க

2 ஸ்பூன் மல்லி

1 ஸ்பூன் சோம்பு

1 ஸ்பூன் மிளகு

அரை ஸ்பூன் சீரகம்

ஒரு ஸ்பூன் கசகசா

6 காஞ்ச மிளகாய் (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயோட அளவை கூட்டிக்கலாம், குறைச்சுக்கலாம்)

தாளிக்க

கால் கிலோ சின்ன வெங்காயம்

ஒரு தக்காளி

2 பட்டை

1 அண்ணாச்சி பூ

2 கிராம்பு

1 கல்பாசி

2 ஏலக்காய்

கொஞ்சம் கருவேப்பிலை

செய்யறது எப்படி?

பொசுக்கி, மஞ்சள் தூள் போட்டு தீயில வாட்டுன நாட்டுக்கோழிய துண்டு துண்டா வெட்டி நல்லா கழுவிக்கணும். அதுல குட்டி குட்டி முட்டை இருந்தா வேஸ்ட் பண்ணிடாதீங்க.

குக்கர்ல இந்த நாட்டு கோழியை போட்டு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, தட்டி போட்டு சிக்கன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நாலு விசில் விட்டு வேக வைக்கலாம்.

ஒருவேளை கோழி கொஞ்சம் முதிர்ச்சியான கோழியா இருந்ததுன்னா அதிக விசில் தேவைப்படலாம்.

சிக்கன் வெந்ததுக்கு அப்புறம் அதோட சாறு எடுத்து, அதுல கொஞ்சம் நல்லெண்ணையை ஊத்தி எல்லாத்துக்கும் சூப் மாதிரி கொடுத்தா அவ்வளவு தெம்பா இருக்கும். நெஞ்சு சளி பறந்து போய் மூக்கு வழியா வந்துரும்.

கடாயில எண்ணெய் ஊத்தி, காஞ்சதுமே கருவேப்பிலை, பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, கல்பாசி, ஏலக்காய், சேர்த்து தாளிச்சுக்கணும். பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை, சேர்த்து வதக்கி, வெங்காயம் பொன்னிறமா வந்ததுக்கு அப்புறம் தக்காளி சேர்க்கணும்.

வறுக்குறதுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் மசாலா பொருட்கள எல்லாத்தையும் சேர்த்து வறுத்து எடுத்து அரைச்சு மசாலாவ சூடா, ஃப்ரஷ்ஷா அப்படியே அரைச்சு ப்ரிப்பேர் பண்ணிக்கணும். அது கூட இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்லா மைய அரைச்சு எடுத்துக்கலாம்.

தக்காளி நல்லா வணங்குனதுக்கு அப்புறம், அதுல மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கணும். கொஞ்ச நேரம் கழிச்சு சிக்கன் சேர்த்து அஞ்சு நிமிஷம் வறுக்கணும்.

சிக்கன் கடாயில் கால்வாசி வெந்ததுக்கப்புறம் அரைச்ச கலவையை அதோட சேர்த்து நல்லா கொதிக்க வைக்கனும்.

கடைசியா தேவையான அளவு தண்ணீர் உப்பு எல்லாத்தையும் சேர்த்து கொதிக்க விடணும். சிக்கன் குழம்பு நல்லா கொதிச்சு கெட்டியானதும் அடுப்பை அணைச்சுட்டு, கொத்தமல்லி தலையை அது மேல தூவி விடணும். அதுக்கப்புறம், சூடு செய்யாத பச்சையான நல்லெண்ணைய நாட்டுக்கோழி மேலே ஊத்தி விட்டு கிளறிவிட்டு அப்படியே பரிமாறலாம். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு என எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா யூஸ் பண்ண சூப்பரா இருக்கும். சுவையா வறுத்து அரைச்ச நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE