அரண்மனை 4- படம் எப்புடி? பாக்கலாமா?

படத்தின் ஒன்லைன்

தங்கை தமன்னாவையும், அவரது கணவரையும் கொன்றவர்களைக் கண்டறிய அரண்மனைக்கு வரும் சுந்தர் சி, தீயசக்தியை எதிர்த்து போராடும் கதைதான் அரண்மனை 4.

யாரெல்லாம் நடிச்சுருக்காங்க?

இதில் சுந்தர் சி வழக்கறிஞர் சரவணனின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுந்தர் சி-யின் அத்தை கதாப்பாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடித்திருக்கிறார். சுந்தர் சியின் தங்கையான தமன்னாவும், மருத்துவர் கதாப்பாத்திரத்தில் ராஷி கண்ணாவும், தமன்னாவின் கணவராக சந்தோஷ் பிரதாப்பும் நடித்திருக்கிறார். அத்துடன் சிம்ரனும்-குஷ்பூவும் அம்மன் பாடலுக்கு நடனமாடுகின்றனர்.

இவர்களுடன் யோகி பாபு, மறைந்த நடிகர் சேஷூ, வி.டி.வி. கணேஷ், டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமாரும் ஓரிடத்தில் நடித்திருக்கிறார்.

கதை என்ன?

சுந்தர் சி-யின் தங்கை தமன்னா தற்கொலை செய்தகொண்டதாக அறிந்ததும் அதிர்ச்சியில் உறையும் சுந்தர் சி, தன் தங்கை வாழ்ந்த அரண்மனைக்கு செல்கிறார். அங்கு செல்வியான தமன்னாவும், அவரது கணவரும் இறந்ததில் மர்மம் இருப்பதாக தனது வழக்கறிஞர் மூளையை வைத்து சந்தேகிக்கிறார்.

அப்போது அங்கு கோவை சரளா, ராஷி கண்ணா, குழந்தையைச் சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து தீயசக்தியின் நடமாட்டத்தை அறியும் சுந்தர் சி, அந்த தீயசக்தி, அந்தக் குடும்பத்தில் மற்றொரு உயிரைப் பறிக்கத் துடிப்பதை அறிந்து அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்.

தீய சக்தியோடு போராடுவதும், அது பிடியில் இருந்து விடுபடுவதுமாகவும், பழிவாங்கலுக்கான காரணமும் படத்தில் இடம்பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மனதில் பதியும்படி விளக்கவில்லை என சில சினிமா விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

முதல் பாதி

படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக நடைபோடுகிறது. காமெடி, திகில் என படத்தின் பல இடங்களில் தேவையான விஷயங்களைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. படத்தில் தமன்னா மற்றும் ராசி கன்னா நன்றாக நடித்திருந்தும் அவர்களுக்கு குறைவான காட்சிகளே இருப்பதாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் சற்று குறைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். தேவையான இடத்தில் போதிய விளக்கங்கள் கொடுத்ததில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

கோடை கால விடுமுறையில் சினிமா என்றாலே குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதுவும் பேய் படம், திகில் காட்சிகள் என்றால் எப்படியும் அரங்கை நிறைத்துவிடுவார்கள் என்றே சமயம் பார்த்து படத்தைக் களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி. முதல் 2 நாட்களில் 10.50 கோடி ரூபாயை வசூலித்து இந்த ஆண்டின் ஹிட் பட கணக்கை சிறப்பாகத் துவக்கியுள்ளது.

ஐஎம்டிபி என்ற சினிமா விமர்சன இணையதளம் அரண்மனை 4 படத்துக்கு 7.4 என்ற ரேட்டிங்கை வழங்கியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE