லியோ திரைப்பட இசைவெளியீடு விழா ரத்து – பின்னணி அரசியல் என்ன?

முன்பெல்லாம், “படப்பிடிப்பு தொடங்கியது”, “படம் ரிலீசாகும் தேதி” இந்த 2 அப்டேட்டுக்கள் மட்டுமே போஸ்டராக வெளியிடப்படும். ஆனால், தற்போது முதல் டீசர், முதல் பாடல், முதல் போஸ்டர், ட்ரெய்லர் லாஞ்ச், ஆடியோ லாஞ்ச், அதை ஒட்டி ஒரு சர்ச்சைப் பேச்சு ஆகியவையே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

விஜய் படத்தின் ஆடியோ லாஞ்ச் என்றாலே ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஏற்கெனவே காக்கா கழுகு கதை ரஜினிகாந்த் ஜெய்லர் ஆடியோ லாஞ்சில் கூறியபோது, லியோவில் பதில் இருக்கு என காத்திருந்தனர். இந்தநிலையில், ஆடியோ லாஞ்சே இல்லை, ஸ்ட்ரெய்ட்டா ரிலீஸ்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வில், 5-வது முறையாக திரிஷாவும், 2.வது முறையாக லோகேஷ் கனகராஜூம், 4.வது முறையாக அனிரூத்தும் இணைகின்றனர். இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே விஜயின் பிறந்தநாளன்று லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் விரும்பும் வகையில் அப்டேட் வரவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போஸ்டர்கள் மட்டுமே வெளியாகின. இன்னும் 3 நாட்களில், படத்துக்கான ஆடியோ லாஞ்ச் திட்டமிடப்பட்டது.

இதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செட் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. ஆனால், திடீரென்று தயாரிப்பு நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. “அதிக டிக்கெட்டுகள் கோரிக்கை, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இது அரசியல் அழுத்தங்களினாலோ, வேறு காரணங்களினாலோ அல்ல” என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதேபோல்தான் பீஸ்ட் ஆடியோ லாஞ்சும் நின்று போனது.

லியோ பட ஆடியோ லாஞ்ச் விவகாரத்தில் அரசியல் காரணமில்லை எனக் கூறியபோது தான், அதுதான் முக்கியக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதாம்.

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடர்ந்து பல படங்களை வெளியிட்டு வரகிறது. விஜய்யின் வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஒரு சில முக்கிய பகுதிகளின் வெளியீட்டையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது.

அதேபோல லியோ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட்டுக்கு வழங்கினால் மட்டுமே, லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ரெட் ஜெயன்ட் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதாக சமீபத்தில் இணையத்தில் சில தகவல்கள் பரவியது. இதை லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மறுத்துள்ளது.

ஏற்கெனவே சென்னையில் ஏ.ஆர்‌.ரகுமான் இசை கச்சேரியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. அதுபோல் ஏதும் நடக்காமவ் இருக்க ஆடியோ லாஞ்ச் நடக்காமல் இருப்பதே நன்று என சில ரசிகர்கள் கருதி வருகின்றனர். ஒரு பக்கம் போலி டிக்கெட்டுகள் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. 5,000 ரூபாய் தொடங்கி 8,000 பத்தாயிரம் என்று டிக்கெட் விற்பனைக்கு பேரம் பேசிய ஆடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் லியோ படத்தில் 2 பாடல்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசை வெளியீட்டு விழா எதற்கு என்றும் விழாவை ரத்து செய்ததே நல்லதுதான் என்று விஜய் ரசிகர்களிடம் நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE