நாளொன்றுக்கு சராசரியாக 16 லட்சம் பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு ஃபுட் பாய்சனில் பாதித்தவர்களுக்கு பெரும்பாலும் எந்த வகையான உணவால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தற்போது பார்க்கலாம்.

பச்சை இறைச்சி

பச்சையாகவோ, அல்லது சரியாக வேகவைக்கப்படாத உணவோ ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். இதில் அதிக ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. சாப்பிட்டு முடித்த பின் மீதமுள்ள சமைத்த இறைச்சியை 2 மணி நேரத்துக்குள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால், அதில் உள்ள கேம்பிலோஃபாக்டர் என்ற நுண்ணுயிர்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

சரிவர கழுவாத காய்கறிகள்

காய்கறிகள் பூச்சிகளின்றி வளர ஏராளமான பூச்சிக் கொல்லி, களைக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. இதனால், சந்தையில் அல்லது கடையில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும். அவ்வாறு சரிவர கழுவாத காய்கறிகளை சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் அதிகரிக்கும். பச்சைக் காய்கறிகளில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா உள்ளிட்ட பாக்டீரியாக்கள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும்.

பால் பொருட்கள்

காய்ச்சாத பாலைக் கொண்டு தயாரிக்கும் ஐஸ்கிரீம், தயிர் உள்ளிட்டவை பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். பச்சைப் பாலில் உள்ள பாக்டீரியாக்கள் காசநோயை ஏற்படுத்தக் கூடும் என நம்பப்படுகிறது. அவ்வாறு பாலை சூடாக்கும்போதும் கூட பெரியளவில் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்துபோவதில்லை. எனவே, பாலை நன்கு சூடாக்கி பருகுவதே ஃபுட் பாய்சனை ஏற்படுத்தாமல் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்க வேண்டும். மேலும் கறந்த பாலில் கூட மாட்டின் சிறுசிறு முடிகள் இருக்கும் என்பதால் அதை நன்கு வடிகட்டிய பின்பே காய்ச்ச வேண்டும்.

பச்சை முட்டை

பச்சை முட்டையில் ஒரு சில கெட்ட பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, பச்சை முட்டையை பழக்கமில்லாதவர்கள் சாப்பிட்டுவிட்டு, பின் வாந்தி, பேதி என அவஸ்தைப் பட வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு ஹாஃப் பாயில் கூட ஆபத்துதான். எனவே, வெள்ளைக் கருவும், மஞ்சள் கருவும் நன்கு வேகவைத்த பின், முட்டையைச் சாப்பிடுவது நல்லது.

பச்சை மீன்

மீன்களில் பச்சை வாசனை போகும் வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், நன்கு வேகவைக்காத மீனைச் சாப்பிடும் போதும் உணவு விஷமாகும் அபாயம் உள்ளது.

முளைகட்டிய பயறுகள்

முளைகட்டிய பயறுகளைப் பெரும்பாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில், முளைகட்டிய பயறுகளை அதிக நேரம் ஈரத்தோடு வைத்திருப்பது அதில் பூஞ்சைகளை ஏற்படுத்திவிடும். பின், அந்த உணவும் விஷமாகிவிடும். குறிப்பாக முளைகட்டிய பயறுகளை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டிருக்கும் முளை கட்டிய பயறுகளால் உணவு விஷமாகும் அபாயம் உள்ளது.

இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE